search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் பங்கேற்பு"

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகம் 844-வது ஆண்டு சந்தனக் கூடு தேசிய ஒருமைப்பாட்டு திருவிழாவாக கோலாகலமாக நடந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தென் மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய புண்ணிய தலங்களில் பிரசித்தி பெற்றது. மத நல்லிணக்கத்திற்கு இந்த புண்ணிய தலம் கடந்த பல நூற்றாண்டுகளாக எடுத்துக் காட்டாக விளங்குகிறது. நாட்டின் பல இடங்களில் மனநலம் பாதித்த ஏராளமானோர் இங்கு வந்து தங்கி சிறப்பு வழிபாட்டிற்கு பின் குணமாகி வீடு திரும்புகின்றனர்.

    ஏர்வாடியில் சந்தனக் கூடு பிரபலமானது. பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 23 நாட்கள் விழா நடைபெறுகிறது.

    கடந்த 23-ந்தேதி அடி மரம் நடப்பட்டு, 24-ந்தேதி மாலை 5 மணியளவில் பேன்ட் வாத்தியம் இசையுடன் யானை, குதிரைகள் அணி வகுத்து வர கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சந்தனக்கூடு வாணவேடிக்கை வானில் வர்ணஜாலம் காட்ட ஊர்வலம் தொடங்கியது. விழாவையொட்டி தர்கா வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது. சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பட்டுச் சென்றதும் தர்காவில் விடிய, விடிய பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    சந்தனக் கூடு ஊர்வலம் யானை, குதிரைகள் ஒன்றன் பின் ஒன்று அணி வகுத்து வந்து ஏராளமான மக்கள் புடை சூழ இன்று அதி காலை 5 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவில் திரளாக நின்றிருந்த மக்கள் ‘‘ நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் என்ற கோ‌ஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலிக்க பக்தர்கள் மலர் தூவி சந்தனக்கூடை வரவேற்றனர்.

    பின் சந்தனப் பேழை மூன்று முறை தர்காவை வலம் வந்தது. இதன் பிறகு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    திருவிழா தொடர் நிகழ்வாக வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு சிறப்பு துவா நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டன. தர்கா வளாகத்தில் மதுரை மதினா லைட் நிறுவனர் ஜாகிர் உசேன் தலைமையில் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது.

    புக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கீழக்கரை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் இன்று (6-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். விழா ஏற்பாடுகளை ஹக்தர் பொது மகா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நடந்த கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா, ஆண்டு தோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள கொடியேற்றம், சந்தனக்கூடு திருவிழா, கொடியிறக்கம் நிகழ்ச்சிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நடப்பாண்டுக்கான விழா கடந்த 14-ந்தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது.

    நேற்று முன்தினம் தர்கா வளாகத்தில் உள்ள கொடி மேடையில் 40 அடி உயர அடிமரம் ஏற்றப்பட்டது. முன்னதாக உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கம் வேண்டியும் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்தார்.

    இதை தொடர்ந்து நேற்று ஏர்வாடி முஜாபிர் நல்ல இபுராகிம் மகாலில் இருந்து வாத்தியங்கள், வாண வேடிக்கைகளுடன் யானை, குதிரைகள் முன் செல்ல அலங்காரத்துடன் கொடி ஊர்வலம் புறப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலத்தில் இந்து சமூக இளைஞர்கள், பெண்கள் பிறைக் கொடிகளை ஏந்தியபடி அணிவகுத்து வந்தனர்.

    ரத ஊர்வலம் தர்கா வளாகத்தை மூன்று முறை வலம் வந்தது. பக்தர்களின் ‘நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர்’ என்ற தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினர். கொடியேற்றத்தின் போது இந்து சமூகப் பெண்கள் குலவையிட்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

    முன்னதாக தர்காவில் பாதுஷா நாயகத்தின் புகழ் மாலையை தர்ஹா ஹக்தார்கள் ஒதினர். கீழக்கரை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.ராமேசுவரம் கோவில் தக்கார் குமரன் சேதுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஆகஸ்டு 5-ந்தேதி சந்தனக்கூடு, 6-ந்தேதி அதிகாலை சந்தனம் பூசுதல், 12-ந் தேதி கொடியிறக்கத்துடன் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில், ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை ஆலோசனையின் பேரில் கடலாடி யூனியன் வளர்ச்சி அதிகாரி பாண்டி தலைமையில், ஊராட்சி செயலர் அஜ்மல்கான் மற்றும் அலுவலர்கள் பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொண்டனர்.

    ×